
“நிச்சயமாகவே நீர் அவர்களை வழுக்குநிலங்களில் நிறுத்தி, பாழாய்ப்போகும்படி தள்ளிவிடுகிறீர்.” — சங்கீதம் 73:18
❓ ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்திலும் எழும் கடினமான கேள்விகள்
ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் சில நேரங்களில் பல கடினமான கேள்விகள் எழும்:
- ❓ தேவனை மறுதலிப்பவர்கள் ஏன் வாழ்க்கையில் செழிப்பது போல் தோன்றுகிறது?
- ❓ பெருமையோடும் அகந்தையோடும் வாழ்பவர்கள் வெற்றியடைவதும், உண்மையான விசுவாசிகள் சோதனைகள், ஏமாற்றங்கள் மற்றும் பதிலற்ற ஜெபங்களோடு போராடுவதும் ஏன்?
உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்த்து, “ஆண்டவரே, நான் உம்மைச் சேவிப்பது வீண்தானா?” என்று என்றாவது உங்கள் மனதிற்குள் ரகசியமாகக் கேட்டதுண்டா? அப்படி இருந்தால், நீங்கள் தனி ஆள் அல்ல. சங்கீதக்காரனாகிய ஆசாப்பும் இதே கேள்விகளோடு தன் உள்ளத்தில் போராடினான்.
⚖️ செழிப்பு ஒரு இடறுதலின் கல்லாக மாறும்போது
சமீபத்தில், அதிகாரம் நிறைந்த சக்திவாய்ந்த மனிதர்கள் சிலர், சாதாரண மக்களின் துன்பங்களைப் பற்றி எவ்வித இரக்கமும் இன்றி பேசுவதைக் கண்டேன். அவர்களின் தன்னம்பிக்கையும், செல்வாக்கும், வெளிப்படையான வெற்றியும் என் இருதயத்தைக் கலங்கப்பண்ணியது.
“தேவனைத் தேடுபவர்கள் துன்பப்படும்போது, தீயவர்கள் ஏன் செழிக்க வேண்டும்?” என்ற கேள்வி எனக்குள் எழத் தொடங்கியது. இந்த பாரத்தோடு நான் கர்த்தரின் சமூகத்திற்குச் சென்றபோது, அவர் சங்கீதம் 73-ஐ என் நினைவிற்குக் கொண்டுவந்தார்:
“ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் ஏதுவாயிருந்தது. துன்மார்க்கரின் வாழ்வை நான் கண்டபோது, வீம்புகாரர்மேல் பொறாமை கொண்டேன்.” — சங்கீதம் 73:2–3
ஆசாப் தீயவர்கள் செழிப்பதைக் கண்டான்:
- 💰 அவர்கள் ஐசுவரியவான்களாகத் தோன்றினார்கள்.
- 🏛️ அவர்கள் வெற்றியாளர்களாகக் காட்சிளித்தார்கள்.
- 😌 சாதாரண மக்களைப் பாதிக்கும் பாரங்களிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டவர்களைப் போலத் தெரிந்தார்கள்.
அதே நேரத்தில், தேவனுடைய பிள்ளைகளோ பாரமான சுமைகளைச் சுமந்துகொண்டிருந்தார்கள். இந்த முரண்பாடு அவனைப் பெரிதும் கலங்க வைத்தது; ஒரு கணம் அவனது விசுவாசம் அசைக்கப்படத் தொடங்கியது.
⛪ திருப்பம்: தேவனுடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தல்
ஆசாப் தேவனுடைய பிரசன்னத்திற்குள் பிரவேசித்தபோது எல்லாமே மாறியது.
“நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து, அவர்களுடைய முடிவை உணரும் வரைக்கும் அப்படி இருந்தது.” — சங்கீதம் 73:17
இந்த பதில் அரசியலின் மூலமாக வரவில்லை. பொருளாதாரத்தின் மூலமாக வரவில்லை. மனித ஞானத்தின் மூலமாக வரவில்லை. பதில் தேவனுடைய பிரசன்னத்தில் மட்டுமே வந்தது.
சூழ்நிலைகள் மாறவில்லை. தீயவர்கள் இன்னும் செழிப்பாகவே இருந்தார்கள்; உலகம் இன்னும் அநீதியானதாகவே தோன்றியது. ஆனால், ஆசாப்பின் பார்வை மாறியது! ஏனெனில் அவன் வாழ்க்கையைத் தற்போதைய தருணத்தின் வழியாகப் பார்க்காமல், நித்தியத்தின் வழியாகப் பார்க்கத் தொடங்கினான். தீயவர்கள் இன்று எங்கே நிற்கிறார்கள் என்பதையல்ல, அவர்களின் பாதை இறுதியில் எங்கே போய் முடியும் என்பதைத் தேவன் அவனுக்குக் காண்பித்தார்.
⚠️ தீயவர்களின் முடிவு
ஆண்டவர் இந்த ஒரு வசனத்தை என் இருதயத்தில் ஆழமாகப் பதித்தார்:
“நிச்சயமாகவே நீர் அவர்களை வழுக்குநிலங்களில் நிறுத்தி, பாழாய்ப்போகும்படி தள்ளிவிடுகிறீர்.” — சங்கீதம் 73:18
மனிதப் பார்வையில், தீயவர்கள் உறுதியான அஸ்திபாரத்தில் நிற்பது போலத் தோன்றலாம்.
- 💰 அவர்களின் செல்வம் பாதுகாப்பானதாகத் தோன்றலாம்.
- 👑 அவர்களின் அதிகாரம் நிரந்தரமானது போலக் காட்சிளிக்கலாம்.
ஆனால் மனித கண்கள் காண முடியாததை தேவன் காண்கிறார். அவர்களின் செழிப்பு வழுக்கு நிலத்தின் மேல் நிற்கிறது. இன்று உறுதியாகத் தோன்றுவது நாளை மறைந்துவிடும். அதிகாரம் மங்கும்; செல்வம் கரையும்; புகழ் ஆவியாய்ப்போகும். மனித மகிமை தற்காலிகமானது. தேவ மேல் கட்டப்பட்டவை மட்டுமே என்றென்றும் நிலைநிற்கும்.
🤝 தேவ பிள்ளைகளின் மாபெரும் நம்பிக்கை
பின்னர் கர்த்தர் என் கவனத்தை மற்றொரு அழகான வாக்குத்தத்தத்திற்குத் திருப்பினாா்:
“ஆனாலும் நான் எப்போதும் உம்மோடு இருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.” — சங்கீதம் 73:23–24
என்னே ஒரு ஆச்சரியமான முரண்பாடு!
- 💰 தீயவர்களுக்குச் செல்வம் இருக்கலாம், ஆனால் தேவ பிள்ளைகளுக்கு அவருடைய பிரசன்னம் உண்டு.
- 👑 தீயவர்களுக்குத் தற்காலிக அதிகாரம் இருக்கலாம், ஆனால் விசுவாசிகளை சர்வவல்லவரின் கரம் பிடித்துக்கொண்டிருக்கிறது.
- 🏠 தீயவர்கள் ஒரு காலத்தில் சுகபோகத்தை அனுபவிக்கலாம், ஆனால் தேவ பிள்ளைகள் நித்திய மகிமைக்காக ஆயத்தமாக்கப்படுகிறார்கள்.
இதைவிட மேன்மையான பொக்கிஷம் வேறு என்ன இருக்க முடியும்?
🌿 நீங்கள் சோர்ந்துபோயிருக்கும்போது…
தேவனுக்கு விரோதமாகச் செயல்படுபவர்களின் வெற்றியைக் கண்டு நீங்கள் என்றாவது சோர்ந்துபோயிருந்தால், இந்தச் சத்தியங்களை நினைவில் கொள்ளுங்கள்:
- ✅ செல்வம் தற்காலிகமானது.
- ✅ தேவன் இல்லாத வெற்றி என்றென்றும் நிலைக்காது.
- ✅ தேவனுடைய பார்வை நமது தற்போதைய புரிதலை விடப் பெரியது.
- ✅ கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் கரத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்.
- ✅ நித்தியத்தின் பார்வை, இன்றைய சூழ்நிலைகளை நாம் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது.
இன்றைய தோற்றத்தைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை மதிப்பிடாதீர்கள். தேவன் தொடக்கம் முதல் முடிவை அறிந்தவர்.
🛤️ இரண்டு பாதைகள்
தீயவர்கள் ஒரு மலையின் மீது ஏறுவது போலத் தோன்றலாம், ஆனால் பலர் வழுக்கு நிலத்திலேயே நிற்கிறார்கள். தேவ பிள்ளைகள் பள்ளத்தாக்குகளின் வழியே நடப்பது போலத் தோன்றலாம், ஆனால் அவர்கள் தங்கள் வலது கரத்தைப் பிடித்துள்ளவரோடு நடக்கிறார்கள்.
- ⚠️ ஒரு பாதை அழிவில் முடிகிறது.
- ✨ மறுபாதை மகிமையில் முடிகிறது.
கிறிஸ்துவில் முடியும் பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
🙏 ஜெபம்
ஆண்டவராகிய இயேசுவே, தீயவர்களின் செழிப்பைக் கண்டு என் மனம் கலங்கும்போது, உம்முடைய கண்களால் வாழ்க்கையைப் பார்க்க எனக்கு உதவி செய்யும். என் இருதயத்தைப் பொறாமையிலிருந்தும் கசப்பிலிருந்தும் விலக்கிக் காரும். என் கண்களால் காண்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாதபோது, உம்முடைய ஞானத்தை நம்ப எனக்குக் கற்றுத்தாரும். என் வலது கரத்தைப் பிடித்து, உம்முடைய ஆலோசனையினால் என்னை நடத்தி வருவதற்காக உமக்கு நன்றி. நீர் என்னை மகிமையில் சேர்க்கும் நாள் வரை உண்மையுள்ளவனாக இருக்க எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.








Leave a Reply